உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்சாஹரை அடுத்த குர்ஜா நகரில் இடித்துரைப்பாளர் (ஊழலை அம்பலப்படுத்துபவர்) ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வழக்குரைஞரான சுபாஷ் மித்தல் (55) என்ற அந்த இடித்துரைப்பாளரின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை இரவு, இரு சக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர். வங்கிக் கடன் வாங்குவதற்கு ஆலோசனை பெறுவதற்கு வந்ததாகக் கூறி வீட்டுக்குள் நுழைந்த அவர்கள், திடீரென்று சுபாஷ் மித்தலை துப்பாக்கியால் சுட்டனர் என அவரது உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
குர்ஜா நகரில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் முறைகேடுகள் நடப்பதாக பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் சுபாஷ் மித்தல் புகார் அனுப்பினார்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு குழு ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.