கேரள அரசால் வழங்கப்படும் "ஹரிவராசனம்' விருதுக்காக, திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கேரள மாநில சுகாதாரம், குடும்ப நலம், தேவஸ்வம் வாரிய அமைச்சர் வி.எஸ்.சிவகுமார் தெரிவித்ததாவது:
கலைத் துறையிலும், திரைப்படத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு கேரள அரசின் கெளரவமிக்க விருதான "ஹரிவராசனம்' விருது ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது.
கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடி வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்படுகிறது.
அவர் சபரிமலை உயர்நிலைக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரது பாடல்கள், ஐயப்பன் கோயிலுக்கு உலகெங்கும் உள்ள பக்தர்கள் மதங்களைக் கடந்து, மன அமைதி வேண்டி, சகோரத்துவத்துடன் குவிவதை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளன.
இந்தப் பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக அவருக்கு இவ் விருது வழங்கப்படுகிறது.
சபரிமலையில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள விழாவில் அவருக்கு விருது வழங்கப்படும்.
கலைநயமிக்க உலோகத்தால் ஆன விருதுடன் ரூ.1 லட்சம் பணம், சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்படும் என்றார் வி.எஸ்.சிவகுமார்.