
பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்ததற்காக, ரூ. 2.12 கோடிக்கு மேல் இருப்பு வைத்துள்ள 37 பேரின் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளதாக, சர்வதேச பயங்கரவாத நிதி எதிர்ப்பு அமைப்பான நிதி முறைகேடு தடுப்புப் பிரிவு (எஃப்.ஏ.டி.எஃப்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிரான்ஸ் உள்ளிட்ட இடங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, எஃப்.ஏ.டி.எஃப் அமைப்பின் பரிந்துரைகளின்படி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகள், பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியளித்தல் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்பது குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும், சட்டவிரோத நடைமுறைகளுக்கும் நிதியுதவி அளித்ததற்காக, கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை 37 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கணக்குகளில் மொத்தம் ரூ.2.12 கோடிக்கு கூடுதலான தொகை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.