வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை
வரும் மார்ச் 15-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி தனது இறுதி வாதத்தை முன்வைத்தார். "இந்த வழக்கை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் முழுமையாக ஆராய்ந்து சரியான தீர்ப்பை வழங்கியது. ஆனால், மேல்முறையீட்டு வழக்கில் சொத்து விவரங்களை தவறாக மதிப்பிட்டு பிழையான தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதை ரத்து செய்து, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்' என்று குறிப்பிட்டார்.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு எதிரான வாதங்களை வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் நடத்த அனுமதி அளித்து வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.