நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான 2 வழக்குகளில் அமலாக்க இயக்ககம் குற்றப் பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளது.
அவற்றில் முதல் குற்றப்பத்திரிகை காங்கிரஸ் எம்.பி. விஜய் தார்தா மற்றும் அவரது வர்த்தகக் கூட்டாளியான மனோஜ் ஜெயஸ்வால் உள்ளிட்டோர் மீது தில்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அமலாக்க இயக்ககம் தில்லியில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் "ஏஎம்ஆர் அயர்ன் அண்ட் ஸ்டீல், தார்தா, அவரது வர்த்தகக் கூட்டாளி மனோஜ் ஜெயஸ்வால் உள்ளிட்டோர் மீது இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மகாராஷ்டிர மாநிலத்தின் பந்தர் பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கில் பதிவு செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையாகும். "சில நிறுவனங்களும், தனிநபர்களும் தவறான தகவல்களை அளித்து, சுரங்க ஒதுக்கீட்டைப் பெற்றனர்' என்று இந்தக் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது வழக்கு: மற்றொரு குற்றப் பத்திரிகையானது, ஹைதராபாதைச் சேர்ந்த நவபாரத் பவர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு எதிராக அமலாக்க இயக்ககத்தால் தில்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டதாகும்.