பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதில் இருந்து விலகிக்கொள்வதாக, உச்ச நீதிமன்ற நீதிபதி வி.கோபால கெளடா வியாழக்கிழமை அறிவித்தார்.
கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, விஹெச்பி முன்னாள் தலைவர் அசோக் சிங்கால் உள்பட தலைவர்கள் 18 பேர் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை அலாகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு உறுதி செய்தது.
அதை எதிர்த்து ஹாஜி மெஹ்பூப் அகமது என்பவரும், சிபிஐ-யும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாகத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை, நீதிபதி வி.கோபால கெளடா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.
இந்நிலையில், நீதிபதி கோபால கெளடா வழக்கு விசாரணையில் இருந்து திடீரென விலகியுள்ளார். மேலும், வேறொரு அமர்வுக்கு இந்த மனுக்களை தலைமை நீதிபதி மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, இந்த மனு தொடர்பாக கடந்த ஆண்டு சிபிஐ தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், சிபிஐயின் நடவடிக்கைகளிலும், சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைகளிலும் யாரும் ஆதிக்கம் செலுத்தவில்லை என்றும், சிபிஐ சுதந்திரமாகச் செயல்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.