ஹைதராபாதில் தாக்குதல் நடத்த சதி: ஐ.எஸ். தொடர்புடைய 11 இளைஞர்கள் கைது

ஹைதராபாத் நகரில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேற்கொண்ட சதி முறியடிக்கப்பட்டது.

ஹைதராபாத் நகரில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேற்கொண்ட சதி முறியடிக்கப்பட்டது.

பழைய ஹைதராபாதின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) நடத்திய சோதனையில் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 11 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிப்பொருள்கள், ஆயுதங்கள், போலி அடையாள ஆவணங்கள், அமிலங்கள் உள்ளிட்ட பல்வேறு வேதிப்பொருள்கள், ரூ.15 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹைதராபாத் நகரின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வைப்பது உள்பட பல்வேறு வழிகளில் தாக்குதல் நடத்த ஐஎஸ் பயங்கரவாதிகள் சதி செய்துள்ளதாகவும், அதற்காக அந்நகரில் உள்ள இளைஞர்களை ரகசியமாகப் பயன்படுத்தி வருவதாகவும் உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சிலர் கடந்த 4 மாதங்களாக ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

சந்தேகம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த அதிரடி சோதனையும், கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்டவர்கள், சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர். ஹைதராபாத் நகரில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த இவர்கள் தயாராகி வந்துள்ளனர் என்றும். இதற்காக ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து அந்த இளைஞர்கள் பணம் பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.

முகமது இப்ராஹிம் யாஷ்தானி, ஹபீப் முகமது, முகமது இர்ஃபான், அப்துல் பின் அகமது, முஷாபர் ஹூசைன், ரிஸ்வான், முகமதுல்லா ரஹ்மான், அல் ஜிலானி அப்துல் காதர், முகமது அர்பாஸ் அகமது உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடைபெற்றதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு:

சிறுபான்மையினர் வாக்குவங்கியைக் கருத்தில் கொண்டு ஹைதராபாத் நகரை பயங்கரவாதிகளின் புகலிடமாக மாற்றிவிட்டதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர், ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

சிறுபான்மையினரின் வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஹைதராபாத் நகரை பயங்கரவாதிகளின் புகலிடமாக முதல்வர் சந்திரசேகர ராவ் மாற்றிவிட்டார். பயங்கரவாதச் செயலுக்கு சதி செய்கிறார்கள் என்ற சந்தேகம் இருந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க மாநில அரசு தவறிவிட்டது. இதனால் தேசிய அளவில் ஹைதராபாத் நகருக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com