

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப் பயணமாக அடுத்த மாதம் 4-ஆம் தேதி இஸ்ரேல் செல்லவிருக்கிறார்.
இந்தியப் பிரதமர் ஒருவர், மிக நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலுக்குச் செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இஸ்ரேல் அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம் 4-ஆம் தேதி இஸ்ரேல் வருகிறார். இங்கு 3 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் அவர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசுவார்.
மேலும், இஸ்ரேலைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரிடையே மோடி உரையாற்றுவார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் அவர் இஸ்ரேல் பயணம் மேற்கொள்கிறார்.
இஸ்ரேலில் சுமார் 80,000 இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அவர்கள், அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக தனி வலைதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். குஜராத் முதல்வராக இருந்தபோதே இஸ்ரேலுடன் நல்ல நெருக்கத்தைக் கடைப்பிடித்து வந்த மோடி, கடந்த 2006-ஆம் ஆண்டு அந்த நாட்டுக்குச் சென்றார்.
நரேந்திர மோடியின் இஸ்ரேல் வருகை வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று அந்த நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.