உடல் தகுதிச் சான்றிதழ் அளிக்க லஞ்சம்: ராணுவ மருத்துவருக்கு 10 நாள் நீதிமன்றக் காவல்

ராணுவ ஆள்சேர்ப்புத் தேர்வில் பங்கேற்றவர்களிடம் உடல் தகுதிச் சான்றிதழ்களை அளிக்க லஞ்சம் பெற்றதாக எழுந்துள்ள
Updated on
1 min read

ராணுவ ஆள்சேர்ப்புத் தேர்வில் பங்கேற்றவர்களிடம் உடல் தகுதிச் சான்றிதழ்களை அளிக்க லஞ்சம் பெற்றதாக எழுந்துள்ள புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ராணுவ மருத்துவரை 10 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க ஜெய்ப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரி உமேஷ் மிஸ்ரா, தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
ராஜஸ்தானின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ராணுவ ஆள்சேர்ப்புத் தேர்வில் உடல் தகுதிச் சான்றிதழ் அளிக்க லஞ்சம் பெறப்பட்டதாக ராணுவப் புலனாய்வுப் பிரிவிலிருந்து ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடந்த மாதம் 23-ஆம் தேதி அர்ஜுன் சிங், நந்த் சிங் ராத்தோர், சுனில் வியாஸ், மகேந்திர சிங் ஆகிய 4 பேரைக் கைது செய்தோம்.
அப்போது, ரூ.1.79 கோடி ரொக்கமும், ராணுவ ஆள்சேர்ப்பில் பங்கேற்ற 4 பேர் சம்பந்தப்பட்ட ஆவணங்களும் அவர்களது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன. அவர்களிடம் விசாரித்ததில் உடல் தகுதிச் சான்றிதழ் அளிப்பதற்கு லஞ்சம் பெற்றதாகவும், அதற்கு ராணுவ மருத்துவர் ஜெகதீஷ் புரி என்பவரும் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
அதன்பேரில், ஜெகதீஷ் புரியை புதன்கிழமை கைது செய்தோம். விசாரணையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 24 பேருக்கு உடல் தகுதிச் சான்றிதழை அளிக்க தலா ரூ.40ஆயிரம் வரை லஞ்சம் பெற்றதை அவர் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் அவர் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ராணுவத்தின் அனுமதி பெற்றே ஜெகதீஷ் புரியை கைது செய்தோம். ராணுவத்தில் சேர்வதற்கு உடல் தகுதித் தேர்வே இறுதித் தேர்வு. அதில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று உமேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com