அரசியல்வாதிகளைக் காட்டிலும் ஊழல் செய்பவர்களாக அதிகாரிகள் இருப்பார்கள்: பாரிக்கர் விமர்சனம்

போதிய அதிகாரங்கள் கிடைத்தால், அரசியல்வாதிகளைக் காட்டிலும் அரசு அதிகாரிகள் பெரிய ஊழல்வாதிகளாக திகழ்வார்கள் என்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் விமர்சித்துள்ளார்.
அரசியல்வாதிகளைக் காட்டிலும் ஊழல் செய்பவர்களாக அதிகாரிகள் இருப்பார்கள்: பாரிக்கர் விமர்சனம்
Published on
Updated on
1 min read

போதிய அதிகாரங்கள் கிடைத்தால், அரசியல்வாதிகளைக் காட்டிலும் அரசு அதிகாரிகள் பெரிய ஊழல்வாதிகளாக திகழ்வார்கள் என்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் விமர்சித்துள்ளார்.
கோவா சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தாம் மேற்கொண்ட செலவினங்களாக ரூ.16.86 கோடியை திருப்பி வழங்குமாறு கோவா அரசை மாநிலத் தேர்தல் ஆணையம் அண்மையில் கேட்டுக் கொண்டது.
ஆனால், இந்தத் தொகை குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாக கருதிய முதல்வர் மனோகர் பாரிக்கர், அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
மேலும், தேர்தல் ஆணையம் கோரிய தொகை சரிதானா என்பதை ஆய்வு செய்யும் வகையில், ஒரு தணிக்கைக் குழுவையும் அவர் நியமித்துள்ளார்.
இந்நிலையில், கோவா தலைநகர் பனாஜியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஓர் அரசு நிகழ்ச்சியில் மனோகர் பாரிக்கர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
அரசு அதிகாரிகளை விமர்சிப்பதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது. ஆனால், அந்த சூழ்நிலைக்கு தற்போது நான் தள்ளப்பட்டிருக்கிறேன்.
கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்காக மாநில அரசின் கீழ் உள்ள பல்வேறு துறைகளின் வாகனங்கள் ஒதுக்கப்பட்டன.
ஆனால், அதை விட அதிகமான வாகனங்களை மாநிலத் தேர்தல் அலுவலர்கள் பயன்படுத்தினார்கள். எனவே, அவர்களுக்கு வாகனம் வாங்கும் செலவு கிடையாது. எரிபொருள் மட்டுமே அவர்கள் நிரப்ப வேண்டும்.
அவ்வாறு இருக்கும்போது, வெறும் இரண்டு மாதங்களுக்கான செலவினத் தொகையாக ரூ.16.86 கோடியை அவர்கள் அரசிடம் கேட்கிறார்கள். இந்தத் தொகைக்கேற்ப அவர்கள் என்ன செலவு செய்தார்கள் எனத் தெரியவில்லை.
அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறார்கள் எனக் கூறுகிறோம். உண்மைதான். ஆனால், போதிய அதிகாரங்களை அரசு அதிகாரிகளுக்கு வழங்கிப் பாருங்கள்.
அவர்கள் அரசியல்வாதிகளைக் காட்டிலும் பெரிய ஊழல்வாதிகளாக இருப்பார்கள்.
அரசியல்வாதிகளாவது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களிடம் செல்ல வேண்டும்.
மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்தாக வேண்டும். ஆனால், அரசு அதிகாரிகளுக்கு அந்தத் தேவை கிடையாது.
ஒரு பகுதியில் ஏதேனும் சிறிய பிரச்னை ஏற்பட்டால் கூட அரசியல்வாதிகள் அதற்குப் பொறுப்பாக்கப்படுகிறார்கள். அது யாருடைய கவனக்குறைவாலும் நடைபெற்றிருக்கலாம்.
ஆனால், அதற்கு அரசியல்வாதிதான் பதில் சொல்ல வேண்டும். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், இதே பொறுப்பை அரசு அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்றார் மனோகர் பாரிக்கர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com