

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி (95) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார்.
குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த பகவதி கடந்த 1973-இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பின் உச்ச நீதிமன்றத்தின் 17-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த 1985-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்ற பகவதி 1986 டிசம்பர் வரை அப்பதவியில் இருந்தார்.
அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, பொது நல வழக்கு தொடர்வது என்ற நடைமுறையை அறிமுகம் செய்தார். அடிப்படை உரிமைகள் விவகாரத்தில் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட ஒருவர் தாமே நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியதில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
சிறைக் கைதிகளுக்கும் மனித உரிமைகள் உண்டு என்று அவர் வழங்கிய தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அவர் அளித்த தீர்ப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக, மேனகா காந்தி தொடர்ந்த வழக்கில் ஒவ்வொரு நபருக்கும் பாஸ்போர்ட் வைத்திருக்கஉரிமை உண்டு என்பதை உறுதிப்படுத்திய தீர்ப்பு விளங்குகிறது.
இந்நிலையில், அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பகவதி வியாழக்கிழமை காலமானார். அவருக்கு மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். பகவதியின் இறுதிச்சடங்கு சனிக்கிழமை (ஜூன் 17) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.