

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாதி முகமது ஷபி அர்மரை (30) சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா வியாழக்கிழமை அறிவித்தது.
கர்நாடகத்தின் பட்கல் பகுதியைச் சேர்ந்த முகமது ஷபி, ஐஎஸ் அமைப்பில் இணைந்து அந்த பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் பயங்கரவாதக் கருத்துகளைப் பரப்பில், 30-க்கும் மேற்பட்ட இளைஞர்களை இராக், சிரியாவுக்கு அழைத்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்த்துள்ளார் என்று இந்திய உளவு அமைப்புகள் அவர் மீது குற்றம்சாட்டியுள்ளன.
முன்னதாக இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் இருந்த ஷபி, இந்தியாவில் பயங்கரவாத செயல்களைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். அந்த பயங்கரவாத அமைப்பு இந்தியாவில் முடக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்ற அவர், ஐஎஸ் அமைப்பினருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.
முகமது ஷபியின் அண்ணன் சுல்தான் அர்மர் முதலில் ஐஎஸ் அமைப்புக்கு இந்தியாவில் இருந்து இளைஞர்களை சேர்க்கும் வேலையில் இருந்தார். அவர் கொல்லப்பட்ட பிறகு, ஷபி அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இப்போது அவர் இராக் அல்லது சிரியாவில் பதுங்கியிருக்கலாம் என்று தெரிகிறது. இந்நிலையில், ஷபியை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. எனவே, அவரை வேட்டையாடுவதில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தும் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.