பிகாரில் மது வியாபாரிக்கு ஆதரவாக செயல்பட்ட 3 போலீஸார் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இவர்களில் இருவர் காவல் துறை துணை ஆய்வாளர்கள், ஒருவர் கூடுதல் துணை ஆய்வாளர் ஆவார்.
பிகாரில் கடந்த ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி மதுவிலக்கை முதல்வர் நிதீஷ் குமார் அமல்படுத்தினார். அதன் பிறகு சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார். எனினும், சில இடங்களில் போலீஸாரின் துணையுடன் மது வியாபாரிகள் சிலர் செயல்பட்டு வந்ததாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, அத்தகைய போலீஸார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், தலைநகர் பாட்னாவில் சில துணை ஆய்வாளர்கள் இருவரும், கூடுதல் துணை ஆய்வாளர் ஒருவரும் மது வியாபாரிக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, சில நாள்களுக்கு முன்பு அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் மூவரையும் பணி நீக்கம் செய்து மாநில காவல் துறைத் தலைவர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய தலைமைக் காவலர் ஒருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பிகாரில் மது விலக்கு அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த ஓராண்டில் 15 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் உயரதிகாரிகள் ஆவர். இவர்கள் அனைவருமே சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்களுக்கு துணையாக இருந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.