

இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்ற தடை உத்தரவால் எழுந்துள்ள பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதைத் தொடர்ந்து இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பசு, எருது உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது என மத்திய அரசு கடந்த மாதம் 26-ஆம் தேதி உத்தரவிட்டது. இதுதொடர்பான அறிவிக்கையும் வெளியிடப்பட்டது. அரசின் இந்த முடிவானது நாடு முழுவதும் கடுமையான விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. கேரளம், மேற்கு வங்கம், ஒடிஸா உள்பட பல மாநில அரசுகள், இந்த நடவடிக்கையை எதிர்த்தன. கேரளத்திலும், மேகாலயத்திலும் மத்திய அரசுக்கு எதிரான தீர்மானங்கள் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டன.
இந்தச் சூழலில், கால்நடை விற்பனைக்கான கட்டுப்பாட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதற்கு உரிய விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனிடம், இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்: கால்நடை விற்பனைக்கான தடை உத்தரவால் எழுந்துள்ள சில பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் தீவிரமாகவும், நேர்மையாகவும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த தடை உத்தரவை அரசியல் ஆதாயத்துக்காக ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களின் பிரச்னைகளுக்குக் கூட அரசு செவிமடுக்கும்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜூலை 11-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே தகுந்த விளக்கத்தை அரசு அளிக்கும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.