மத்தியப் பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய மந்த்செளர் மாவட்டத்துக்குச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை அந்த மாநில அரசு தடுத்து நிறுத்தியதற்கு சிவசேனைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அக்கட்சியின் நாளேடான ''சாம்னா''வில் வியாழக்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற ராகுல் காந்தி பாதி வழியிலேயே போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
எப்போதெல்லாம் அரசு முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறதோ, அப்போதெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்திப்பதற்கு ஒவ்வொரு உணர்வுமிக்க தலைவருக்கும் நமது ஜனநாயகம் உரிமையை அளித்திருக்கிறது.
சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விடும் என்று கூறி, பாதிக்கப்பட்டவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் இடையே ஒரு சுவரை எழுப்புவது சரியல்ல.
விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு அனுமதி அளிக்கவும், அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் அரசுக்கு அதிகாரம் இருக்குமானால், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவும், அவர்களின் குறைகளைக் கேட்கவும், அவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் உள்ளது. ராகுல் காந்தியை பலவீனமானவர் என்று விமர்சிக்கும், அவர், மந்த்செளர் மாவட்டத்துக்குச் செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டிய காரணம் என்ன? துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்கு ராகுல் காந்தியை அனுமதித்தால் வானம் இடிந்து கீழே விழுந்து விடுமா? என்று அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், வியாழக்கிழமை மந்த்செளர் மாவட்டத்துக்குச் சென்று உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.