

பிரபல திரைப்பட நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை, சிபிஐ வசம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
வழக்கு தொடர்பான ஆவணங்கள், விசாரணை அறிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை கேரள போலீஸார் சிபிஐ அதிகாரிகளிடம் அளித்தனர்.
தென்னிந்தியாவில் பிரபல நடிகராக விளங்கிய கலாபவன் மணி, கடந்த ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி திடீரென உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கலாபவன் மணியின் சகோதரரும், மனைவியும் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவரது உடலில் நச்சு கலந்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு கலாபவன் மணியின் உறவினர்கள், கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனு மீதான விசாரணையின்போது, சிபிஐ தரப்பில் சில காரணங்கள் முன்வைக்கப்பட்டன.
வேலைப் பளுவும், நிலுவையில் பல வழக்குகளும் தங்களுக்கு இருப்பதால் இந்த விவகாரத்தைக் கூடுதலாக விசாரிக்க இயலாது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிஐ அமைப்புக்கு கடந்த மாதம் உத்தரவிட்டது.
மேலும், மாநில போலீஸாரிடம் இருந்து இந்த வழக்கை ஒரு மாதத்துக்குள் தங்கள் வசம் சிபிஐ எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கலாபவன் மணி வழக்கு விசாரணை நடவடிக்கைகளை சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை தொடங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.