

தமிழ்நாட்டில் மாறுபட்ட அரசியல் சூழ்நிலை நிலவுவதாக குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கருத்து தெரிவித்ததாக, அவரைச் சந்தித்த மாநிலங்களவை திமுக முன்னாள் உறுப்பினரும் அக்கட்சியின் விவசாயிகள் அணித் தலைவருமான டாக்டர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.
தில்லியில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரியை அவரது மாளிகையில் கே.பி.ராமலிங்கம் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கே.பி.ராமலிங்கம் கூறியது: இயற்கை நீர் வளப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராக இருப்பதாலும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் என்பதாலும் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரியை சந்தித்துப் பேசினேன். அவரது பதவிக்காலம் அடுத்த சில மாதங்களில் நிறைவு பெறவுள்ளது. இந்நிலையில், தமது பதவிக்காலத்துக்கு முன்பாக, தேசிய அளவில் நீர் வள மேலாண்மைத் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தக் கூடிய ஆக்கப்பூர்வ நடவடிக்கையை எடுக்குமாறு ஹமீது அன்சாரியை கேட்டுக் கொண்டேன். தேசிய அளவில் விவசாயிகள் படும் இன்னல்கள் குறித்தும் விவசாயக் கடன்களால் பாதிக்கப்படுவோர்
குறித்தும் குடியரசுத் துணைத் தலைவருடன் ஆலோசனை நடத்தினேன்.
அப்போது இருவரும் தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தும் பேசினோம். தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு மாறுபட்ட அரசியல் சூழ்நிலை நிலவுவதாகக் கருத்துத் தெரிவித்த அவர், மிகவும் கவனமாக தற்போதைய அரசியல் நிலைமையை அணுக வேண்டியுள்ளது என தெரிவித்தார் என்று கே.பி. ராமலிங்கம் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.