ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நிறைந்த பகுதிக்குள் ஜீப்பின் முன்புறம் இளைஞர் ஒருவரைக் கட்டிவைத்து சென்ற ராணுவ அதிகாரி லீதுல் கோகோய்க்கு விருது அளிக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் வெளியுறவுத் துறை அலுவலக செய்தித்தொடர்பாளர் நஃபீஸ் ஜகாரியா, செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
இளைஞர் ஒருவரை ஜீப்பில் மனிதக் கேடயமாகப் பயன்படுத்திய ராணுவ அதிகாரியான மேஜர் லீதுல் கோகோய்க்கு விருது அளிக்கப்பட்டது கண்டனத்துக்குரிய செயலாகும். அந்த அதிகாரி செய்த செயல் குற்றம் மட்டுமல்ல; மனிதத்தன்மையற்ற செயலுமாகும்.
இந்த விவகாரத்தை ஐ.நா. அமைப்பு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை இந்தியா ஊக்குவித்து வருகிறது.
சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் குல்பூஷண் ஜாதவ் வழக்கில் எங்கள் நாடு வெற்றி பெறத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் அளித்த ஆலோசனைப்படி, காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.
சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் குறித்து அவர் கூறுகையில், "இந்தத் திட்டம் பாகிஸ்தான், சீனாவுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் பயனளிக்கும். இந்தத் திட்டத்தில் இணைய பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன' என்றார் நஃபீஸ் ஜகாரியா.
முன்னதாக, இந்தியாவில் மெச்சத்தக்க வகையில் பணியாற்றியதற்காக வழங்கப்படும் உயர்ந்த விருது ராணுவ மேஜர் லீதுல் கோகோய்க்கு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.