எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: ராணுவத்தைச் சேர்ந்த இருவர் காயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வியாழக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். 
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வியாழக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். 
சிறிய ரக மற்றும் தானியங்கி ஆயுதங்களைக் கொண்டு அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 2 ஊழியர்கள் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக, ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் வியாழக்கிழமை பகல் 11.45 மணிக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். 
அவர்களின் தாக்குதலுக்கு, எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் கடுமையாக பதிலடி கொடுத்தனர். இந்திய ராணுவத்தின் பதிலடிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், பாகிஸ்தான் ராணுவத்தினர் பின்வாங்கிவிட்டனர். இதனால், பகல் 11.55 மணிக்கு துப்பாக்கிச்சூடு முடிவுக்கு வந்தது.
இந்தத் தாக்குதலில், இந்திய ராணுவத்தில் பணியாற்றும் 2 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் நலமுடன் உள்ளனர் என்றார் அந்த மூத்த அதிகாரி.
இதேபோல், பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், கடந்த 4, 3, 1-ஆம் தேதிகளில், பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், பாகிஸ்தான் ராணுவம், கடந்த 1-ஆம் தேதி நிகழ்த்திய தாக்குதலில், எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த துணை காவல் ஆய்வாளர் கமல்ஜித் சிங் உயிரிழந்தார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நிகழாண்டில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com