

ரயில்வே துறைக்குச் சொந்தமான இரு உணவகங்களை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்துக்கு விட்டதில் முறைகேடு செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரும், பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவருக்கும் சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.
லாலு பிரசாத், வரும் 11-ஆம் தேதியும், தேஜஸ்வி யாதவ், வரும் 12-ஆம் தேதியும் வழக்கு விசாரணைக்காக, தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐயின் மூத்த அதிகாரி ஒருவர், வியாழக்கிழமை கூறினார்.
லாலு பிரசாத், ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ராஞ்சி மற்றும் புரி ஆகிய இடங்களில் உள்ள ரயில்வே துறைக்குச் சொந்தமான உணவகங்களை நடத்துவதற்கு சுஜாதா ஹோட்டல் நிர்வாகத்துக்கு ஒப்பந்தங்களை வழங்கினார்.
அதற்கு கைமாறாக, அந்த ஹோட்டல் நிர்வாகத்தின் பினாமி நிறுவனமான டிலைட் மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தின் மூலமாக, 3 ஏக்கர் நிலத்தை லாலு பிரசாத் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, விசாரணை நடத்திய சிபிஐ, லாலு பிரசாத் தனது அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, லஞ்சம் பெற்றதாக வழக்குப் பதிவு செய்தது.
மேலும், அவரது மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர் பிரேம் சந்த் குப்தாவின் மனைவி சரளா குப்தா ஆகியோருக்கு எதிராகவும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
அதுமட்டுமன்றி, சுஜாதா ஹோட்டல் குழும இயக்குநர்கள் விஜய் கோச்சார், வினய் கோச்சார், டிலைட் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் அப்போதைய மேலாண் இயக்குநர் பி.கே.கோயல் ஆகியோருக்கு எதிராகவும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.