பாபர் மசூதி வழக்கு: அத்வானி, ஜோஷி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க அனுமதி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பாபர் மசூதி வழக்கு: அத்வானி, ஜோஷி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க அனுமதி


புது தில்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

லக்னௌ சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ செய்த மேல்முறையீட்டு மனு மீது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தினமும் விசாரணையை நடத்தவும், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் விசாரணையை நடத்தி முடிக்கவும் லக்னௌ நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோருக்கு எதிராக சதி குற்றச்சாட்டுகளை மீண்டும் பதிவு செய்யக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய பாபர் மசூதி கட்டடம் கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக 2 வகையிலான வழக்குகள், தனித்தனி நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. அதாவது, பெயர் குறிப்பிடப்படாத கரசேவகர்களுக்கு எதிரான வழக்குகள், லக்னௌ நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி, உமா பாரதி, உள்ளிட்ட மிகவும் முக்கிய பிரமுகர்களுக்கு எதிரான வழக்குகள், ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர் நீதிமன்றம், அத்வானி, ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச் சதி எனும் குற்றச்சாட்டை கடந்த 2010-ஆம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஹாஜி மகபூப் அகமது என்பவரும், சிபிஐ அமைப்பினரும் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி. கோஸ், ஆர்.எஃப். நாரிமன் ஆகியோரைக் கொண்ட அமர்வு தனது தீர்ப்பை புதன்கிழமை அளிக்கவுள்ளது.

முன்னதாக, இந்த மனுக்கள் மீது கடந்த 6-ஆம் தேதி விசாரணை நடைபெற்றபோது, 2 நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளையும் ஒன்றாக இணைக்கப் போவதாகவும், ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளை, லக்னௌ நீதிமன்றத்துக்கு மாற்றப் போவதாகவும் உச்ச நீதிமன்றம் சூசகமாக குறிப்பிட்டிருந்தது.
இதற்கு பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த குடியரசுத் தலைவராக பாஜக சார்பில் அத்வானியை வேட்பாளராக நிறுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றே கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com