விஜய் மல்லையாவின் கடன் விவரக் குறிப்பு- விரிவாக!

கிங்பிஷர் விமான சேவை நிறுவனர் என்ற நிலை மாறி, தலைமறைவு தொழிலதிபர் என்ற அளவுக்கு தரம் குறைந்த விஜய் மல்லையா நேற்று லண்டனில் கைது செய்யப்பட்டார்.
விஜய் மல்லையாவின் கடன் விவரக் குறிப்பு- விரிவாக!

புது தில்லி: கிங்பிஷர் விமான சேவை நிறுவனர் என்ற நிலை மாறி, தலைமறைவு தொழிலதிபர் என்ற அளவுக்கு தரம் குறைந்த விஜய் மல்லையா நேற்று லண்டனில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ரூ.4.5 கோடியை நீதிமன்றத்தில் கட்டி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் பெற்றுவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா ஏற்கெனவே அறிவித்துள்ளது.

பிரிட்டனில் தலைமறைவாகவுள்ள இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையாவை (61) அந்த நாட்டின் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் லண்டனில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். எனினும், 3 மணி நேரத்துக்குள் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவைக்க வேண்டுமென்று பிரிட்டீஷ் அரசுக்கு மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை இங்கிலாந்து ஏற்றுக் கொண்டது.

இந்த நிலையில், விஜய் மல்லையாவின் தற்போதைய முகவரி என்னவென்றால், அவரது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் 16,023 கோடி நட்டத்தில் உள்ளது. அந்த நிறுவனத்தின் 2013ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியோடு முடிந்த காலாண்டில் நிகர மதிப்பு -12,919 கோடி. இங்கிருக்கும் மைனஸ் என்ற குறியீடை பார்க்க தவறாதீர்கள்.

இந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிள் உட்பட பல்வேறு வங்கிகளில் மல்லைய வாங்கிக் கட்டத் தவறிய கடன் பாக்கி மட்டும் ரூ.9 ஆயிரம் கோடி. இதில், மல்லையாவுக்கு சொந்தமான சொத்துகளை ஏலம் விட்டதில் வெறும் ரூ.1,300 கோடியை மட்டுமே வங்கிகள் திருப்பியுள்ளன.

இது குறித்து நீதிமன்றங்களில் அவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பல்வேறு வழக்குகளில் 500க்கும் மேற்பட்ட வாய்தாக்கள் வாங்கப்பட்டுள்ளது.

இந்திய அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து விஜய் மல்லையாவுக்கு ஏராளமான சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பல நீதிமன்றங்களில் விஜய் மல்லையாவை கைது செய்ய பிடிவாரண்டுகளும், ஜாமீனில் வெளியே வர முடியாத பிடி வாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதோடு, அவர் எந்த வெளிநாட்டுப் பயணத்தையும் மேற்கொள்ள முடியாத அளவுக்கு, மத்திய அரசின் தீவிர நடவடிக்கையால், விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் விஜய் மல்லையா நேற்று லண்டனில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

அவரது கைது நடவடிக்கை குறித்து ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கூறியதாவது:

இந்தியத் தரப்பில் மல்லையா மீது கூறப்பட்ட நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகி உரிய விதிகளின்படி ஜாமீன் பெற்றதால் அவர் விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

மல்லையா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் தரப்பு இது தொடர்பாகக் கூறுகையில், மல்லையா தாமாக முன்வந்து போலீஸில் சரணடைந்து, நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஜாமீன் நிபந்தனைகள் குறித்து வழக்குரைஞர்கள் தரப்பில் இருந்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

மல்லையா கருத்து
ஜாமீனில் வெளியான பிறகு சுட்டுரையில் (டுவிட்டர்) மல்லையா இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், 'வழக்கம்போல இந்திய ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்திகளை வெளியிட்டுள்ளன. என்னை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. இது ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான்' என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள வழக்குகள்
கடந்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி இந்தியாவில் இருந்து லண்டனுக்கு மல்லையா தப்பிச் சென்றார். எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9,000 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாதது மட்டுமின்றி, பல்வேறு காசோலை மோசடி வழக்குகள், தொழில் செய்வதாக வங்கியில் கடன் பெற்று வெளிநாட்டில் சொத்து வாங்கியது, அன்னியச் செலாவணி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மல்லையா மீது உள்ளன.

ஐடிபிஐ வங்கியில் ரூ.720 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வர முடியாக கைது ஆணையை சிபிஐ நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com