நீமுச் (மத்திய பிரதேசம்) : திருமணச்சடங்கு ஒன்றின் பொழுது மணமகளின் உறவுக்காரச் சிறுவனை மணமகன் தவறுதலாக வெட்டிக் கொன்று விட்டதால், கல்யாணம் நின்று போன அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் உள்ளது ராம்புரா கிராமம். இங்கே நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கே நேற்று இரவு திருமண வீடு ஒன்றில், திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது சடங்குகளின் ஒரு பகுதியாக மணமகன் தன் கையில் உள்ள வாளினால் மரமொன்றின் இலைகளை வெட்ட வேண்டும், இந்த சடங்கு நடந்து கொண்டிருந்த பொழுது, மணமகன் தன் கையில் உள்ள வாளினால் வெட்டும் பொழுது தவறுதலாக அருகில் நின்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன் வயிற்றில் வெட்டு ஆழமாக விழுந்தது. இந்த சிறுவன் மணமகளின் அத்தை மகன் ஆவார்.
இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக அந்த சிறுவனை 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டி சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அந்த சிறுவன் மரணமடைந்தான். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் திருமணத்தை ரத்து செய்து விட்டனர்.
தற்பொழுது ராம்புரா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மணமகனின் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விரைவில் கைது செய்யப்படுவார் என்று காவல் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன