புதுதில்லி: நாடு முழுவதும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படுவது கட்டாயமல்ல என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் சேவைக்கட்டணம் என்பது வாடிக்கையாளர்களின் விருப்பமே தவிர கட்டாயமல்ல. இது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடைப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த வழிகாட்டுதல்களின் படி ஹோட்டல் பில்களில் சேவைக்கட்டணம் என்ற பகுதி வெறுமையாகவே இருக்க வேண்டும், விருப்பப்பட்ட வாடிக்கையாளர்கள் அதில் கட்டணத்தை பூர்த்தி செய்யலாம்.
இவ்வாறு ராம்விலாஸ் பாஸ்வான் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மத்திய நுகர்வோர் அமைச்சக அதிகாரி ஒருவர் இது பற்றி கூறும் பொழுது, “கட்டாயமாக சேவைக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று யாரேனும் வற்புறுத்தினால் வாடிக்கையாளர்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யலாம்” என்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் பல ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் சேவைக்கட்டணம் என்று 5% முதல் 20% வரை வசூலிக்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்தே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.