திருப்பதி: திருப்பதியில் சாலையோரக் கடைக்குள் லாரி புகுந்த விபத்தில் 15 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சித்தூர் மாவட்டம் எர்பேடு காவல்நிலையத்துக்கு வெளியே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
காளஹஸ்தி அருகே எர்பேடுமண்டலத்தில், சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது.
இதில், காவல்நிலையத்துக்கு பல்வேறு புகார்களின் கீழ் மனு கொடுக்க வந்தவர்களும் டீக்கடையில் இருந்தவர்களும் என 15 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.
விபத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஆந்திர மாநில துணை முதல்வர், திருப்பதி காவல்துறை கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு, விபத்து நடந்த இடத்தில் இருந்து காயமடைந்தவர்களை விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தேவையான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
லாரியின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.