ரோஹ்தக்: விதிகளை மீறும் போக்குவரத்துக் காவலர்களை புகைப்படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் அனுப்பினால் ரூ.1000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரிய திட்டம் நடைமுறைக்கு வந்திருப்பது தமிழகத்தில் அல்ல, பஞ்சாப் மாநிலம் ரோஹ்தக்கில்.
சாலை விதிகளை மீறியதால், எத்தனையோ முறை போக்குவரத்துக் காவலர்களிடம் அபராதம் செலுத்திய நபர்களுக்கு, அதனை ஈடுகட்ட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், விதிகளை மீறும் போக்குவரத்துக் காவலர்களுக்கு எதிராக விடியோ ஆதாரம் அளித்தால் ரூ.1000 பரிசு வழங்கப்படும் என்று காவல்துறையே அறிவித்துள்ளது.
கட்டாய ஹெல்மெட், சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறைகள் எல்லாம் பொது மக்களுக்கு மட்டும் அல்ல, காவலர்களுக்கும், போக்குவரத்துத் துறை காவலர்களுக்கும் பொருந்தும் என்பதை உணர்த்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் பஞ்சாப் மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளது. காவலர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ, சாலை விதிகளை மீறினாலோ அதனை புகைப்படம் அல்லது விடியோ எடுத்து வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பினால் போதும். அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, ஆதாரத்தை அனுப்பியவரின் முகவரிக்கு ரூ.1000 பரிசுத் தொகை அனுப்பி வைக்கப்படும் என்று ரோஹ்தக் காவல்துறை அறிவித்துள்ளது.
ரோஹ்தக் காவல்துறை கண்காணிப்பாளர் பங்கஜ் நைன் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். மேலும், அவர் மேற்கொண்ட திடீர் ஆய்வில், 75 காவலர்கள் வாகனங்களுக்கு எரிய பேப்பர் இல்லாமல்,ஹெல்மட் இல்லாமல், காரில் சீட் பெல்ட் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக செல்லான் வழங்கி அதிரடி செய்துள்ளார்.