இந்தியாவை 'ஹிந்து ராஷ்டிரமாக' உருவாக்க வேண்டுமெனில், குடியரசுத் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவராக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் இருப்பார் என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் கூறினார்.
இதுதொடர்பாக, மும்பையில் செய்தியாளர்களிடம் அவர், திங்கள்கிழமை மேலும் கூறியதாவது:
நாட்டின் மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவியை, நேர்மையான தலைவர்கள் அலங்கரிக்க வேண்டும். அந்தப் பதவிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் பெயர் பரிசீலிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவை, 'ஹிந்து ராஷ்டிரமாக' உருவாக்க வேண்டுமெனில் அந்தப் பதவிக்கு மோகன் பாகவத் சரியான தேர்வாக இருப்பார். ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் அவருக்கு ஆதரவு தருவது குறித்து சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே முடிவு செய்வார் என்றார் சஞ்சய் ராவத்.
அப்போது, குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளர் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் மோடி சார்பில் அளிக்கும் விருந்தில் பங்கேற்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, சஞ்சய் ராவத் நேரடியாக பதிலளிக்காமல், ''மாதோஸ்ரீ இல்லத்திலேயே (உத்தவ் தாக்கரேவின் மும்பை இல்லம்) விலையுயர்ந்த உணவு வகைகள் கிடைக்கின்றன'' என்று பதிலளித்தார்.
மேலும், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு தேவைப்படுவோர், மாதோஸ்ரீ இல்லத்துக்கு வரலாம். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம்'' என்றும் சஞ்சய் ரௌத் கூறினார்.