எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும்: மோடி அறிவுறுத்தல்
By DIN | Published on : 31st March 2017 01:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

ஜிஎஸ்டி சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு குறித்து எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் பொய்ப் பிரசாரங்களை முறியடிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்களுடன் நரேந்திர மோடி வியாழக்கிழமை காலையில் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டில் இதரப் பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள், பெண்கள் ஆகியோரின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
எனினும், இதரப் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது போன்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. குறிப்பாக, இதரப் பிற்படுத்தபட்டோர் ஆணையத்தை மத்திய அரசு கலைக்க முயற்சிப்பதாக மக்களிடம் எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
அதேபோல், ஜிஎஸ்டி சட்டம் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன. இந்தப் பொய்ப் பிரசாரங்களை பாஜகவினர் முறியடிக்க வேண்டும். மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடையே எடுத்துக் கூற வேண்டும் என்றார் நரேந்திர மோடி.