
புதுதில்லி: ஆளில்லா ரயில்வே கேட்டுகளை ஓராண்டிற்குள் அகற்ற வேண்டும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.
தில்லியில் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு தொடர்பான உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.
இதில், பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், தண்டவாளத்தில் ஏற்படும் குறைபாடு காணமாகவே பெரும்பாலான விபத்துகள் நடைபெறுகின்றன. ரயில் என்ஜின்களில் மூடுபனி தடுப்பு எல்இடி விளக்குகளை பொருத்தவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பாரம்பரியமிக்க ஐசிஎஃப் வடிவ பெட்டி உற்பத்தியை நிறுத்தவும், ஜெர்மனி தொழில் நுட்ப உதவியுடன் நவீன ரக புதிய வடிவ எல்ஹெச்பி பெட்டி உற்பத்தியை மட்டும் தொடர உத்தவிட்டுள்ளார்.
நாட்டில் மூன்று சிறிய ரயில் போக்குவரத்து சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மறுஆய்வு செய்யப்பட்டது. எனினும், யாரும் காயமடையவில்லை. ஒரு ஆண்டுக்குள் 4 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கேட்டுகளை மூட வேண்டும் என்று தெரிவித்தார். ரயில்கள் தடம்புரள்வதற்கும், விபத்துகள் ஏற்படுவதற்கும் ஆளில்லாத ரயில்வே கேட்டுகளே பெருமளவு காரணமாக உள்ளதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து அமைச்சர் பியூஷ்கோயல் அவற்றை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக 115 தடவை ரயில்கள் தடம் புரண்டுள்ளன. இதன் விளைவாக ஆண்டுதோறும் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...