மணிப்பூர்: 40 வருடங்களுக்கு முன் தொலைந்துபோனவர் குடும்பத்துடன் சேர உதவிய யூ-டியூப்
மணிப்பூரைச் சேர்ந்த முன்னாள் ஆயுதப் படை வீரர் 40 வருடங்களுக்கு முன் காணாமல் போன நிலையில், அவரது குடும்பத்தோடு சேர யூ-டியூப் உதவியுள்ளது.
கோம்டிராம் கம்பீர் சிங் (தற்போது வயது 70) மணிப்பூர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் எங்கே போனார் என்று தெரியாமல் குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில், அவர் மும்பை தெருக்களில் பாட்டுப் பாடி பிச்சை எடுத்து வந்தது தெரிய வந்துள்ளது. அவர் ஹிந்திப் பாடல் ஒன்றை பாடும்போது, மும்பையைச் சேர்ந்த இளைஞர் அதனை விடியோ எடுத்து யூ-டியூப்பில் பதிவேற்றியுள்ளார். அது சமூக தளங்களில் பரவியதை அடுத்து, கோம்டிராம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து, கோம்டிராமின் சகோதரர், மணிப்பூர் காவல்துறையின் உதவியோடு மும்பை சென்று தனது சகோதரரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
40 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு பிரிந்து சென்றவர், யூ-டியூப் மூலமாக தனது குடும்பத்தோடு இணைந்திருப்பது குறித்து உறவினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.