ஒடிஸா மாநிலத்தில், ரயில் மோதியதில் தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருந்த 4 யானைகள் உயிரிழந்தன.
ஒடிஸா மாநிலம், பாஹடிஹி வனப்பகுதியில் இருக்கும் ரயில் தண்டவாளத்தை காட்டு யானைகள் திங்கள்கிழமை கடந்து சென்று கொண்டிருந்தன. அப்போது அந்த வழியே வந்த ரயில், அந்த யானைகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 4 யானைகளும் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. இந்த விபத்தில், 2 ஆண் யானைகளும், 2 பெண் யானைகளும் உயிரிழந்தன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில ரயில்கள் வேறு மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டன.
இதுகுறித்த தகவலின்பேரில், மூத்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்டவாளத்தில் கிடக்கும் யானைகளின் சடலங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். விபத்து நடைபெற்ற பகுதியானது, யானைகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதியாகும். அந்தப் பகுதியில் இருக்கும் தண்டவாளங்களை யானைகள் கடந்து செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நிகழும். இதனால், அப்பகுதி வழியே வரும் ரயில்கள், மிகவும் குறைவான வேகத்தில் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், ரயில் மோதி 4 யானைகள் உயிரிழந்துள்ளன.
4 யானைகள் ரயில் மோதி உயிரிழந்திருப்பதற்கு வன உயிரின ஆர்வலர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.