ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களுக்கு தொடர்ந்து 5-ஆவது மாதமாக, அந்நிறுவனத்தால் சம்பளம் வழங்கப்படுவது தாமதமாகி வருகிறது.
ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களுக்கு மாதந்தோறும் 30 அல்லது 31ஆம் தேதிகளில் அந்த மாதத்துக்கான சம்பளம் அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக சம்பளம் அளிக்கப்படுவது தொடர்ந்து தாமதமாகி வருகிறது. ஜூலை மாதத்துக்கான சம்பளம் ஆகஸ்ட் மாதம் தொடங்கி 10 தேதிகள் முடிவடைந்த போதிலும் ஊழியர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை.
ஏர் இந்தியா நிறுவனம் சம்பளத்தை தாமதமாக வழங்கி வருவதால் கோபமடைந்த பைலட் சங்க பொதுச்செயலாளர் தீபன்கர் குப்தா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஏற்கனவே, ஏர் இந்தியா நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதமும் இதே போன்ற பிரச்னை எழுந்தது. இந்த பிரச்னை தற்போதும் நீடித்து வருவது ஊழியர்கள் மத்தியில் வருத்தத்தையும், கோபத்தையும் உண்டாக்கியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் உள்ளது. அதனை ஈடு செய்ய ஏர் இந்தியா நிறுவனத்தின் பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், எந்த நிறுவனமும் ஏர் இந்தியாவை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.