புது தில்லி: சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து கேராளாவில் தொடந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
சபரிமலையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலை, போலீஸாரின் நடவடிக்கைகள் குறித்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கேரள உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.ராமச்சந்திர மேனன், என். அனில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
அதில், கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு விதிக்கப்பட்ட தடை மாற்றப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் கோயில் வளாகத்தில் தங்கிக் கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது.
பக்தர்களுக்கு போலீஸார் ஒரு தலைப்பட்சமான முறையில் விதித்தாக கூறப்பட்ட கட்டுப்பாடுகளை நீதிமன்றம் நீக்கியது. அதே நேரத்தில் சபரிமலையில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கவும் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
இந்நிலையில் சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 23 மனுக்களையும், உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.