ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள்
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு


தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணையை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

11 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே போல, நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களும், தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களான வெற்றிவேல், பார்த்திபன், ரங்கசாமி, தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகியோரது சார்பிலும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்குமாறு இரு தரப்பு வழக்குரைஞர்கள் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது  நேற்று புதன்கிழமை (டிச. 5) முதல் வழக்காக பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர். 

இதையடுத்து நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு நேற்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, டிடிவி. தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகி, 'சட்டப்பேரவைத் தலைவர் என்பவர் பேரவைத் தலைவர் மட்டும் அல்ல. அவர் டிரிபியூனலாகவும் உள்ளார்.

தகுதிநீக்கம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் சட்டப்பேரவைத் தலைவர் காலதாமதம் செய்யக் கூடாது. 

சட்டப்பேரவையில் கொறடாவின் உத்தரவை மீறும் உறுப்பினரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என, ராஜேந்தர் ராணா வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தலைவர் டிரிப்யூனலாக இருப்பதே முக்கிய முடிவுகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே ஆகும். 

ஆனால், இந்த வழக்கில் சட்டப்பேரவைத் தலைவர் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்காமல் அமைதி காப்பது ஜனநாயக விரோதமாகும்' என்றார். வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் விசாரணை இன்று வியாழக்கிழமைக்கு (டிசம்பர் 6) ஒத்தி வைத்தனர். 

இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com