மேக்கேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பினார். மேலும் அதனுடன், தமிழக அரசின் தீர்மானம் தொடர்பான ஆவணமும் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அந்த கடிதத்தில் தீர்மான நகலுடன், தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியில் எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் எனவும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முடிவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், அணை கட்டுவது குறித்து ஆய்வுப் பணிகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.