சாதனை படைக்குமா பாஜக? 5 மாநில பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது

சாதனை படைக்குமா பாஜக? 5 மாநில பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது
சாதனை படைக்குமா பாஜக? 5 மாநில பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது

சாதனை படைக்குமா பாஜக? 5 மாநில பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிஸோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்ட வருகின்றன. 

5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால், இந்த தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. மிஸோரம் மாநிலத்தில் காங்கிரஸும், தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும் ஆட்சியில் உள்ளன. இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக பொதுமக்கள் வாக்குகள்  ஒவ்வொரு சுற்றாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. எனவே, வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு சில மணி நேரத்திலேயே முன்னிலை நிலவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாஜக, காங்கிரஸ் மட்டுமின்றி பல்வேறு பிராந்தியக் கட்சிகளுக்கும் இத்தேர்தல் முடிவுகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில், தேர்தல் முடிவுகளுக்கு ஏற்பவே அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல் கூட்டணிகள் அமையும். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 5 மாநிலங்களிலும் அதற்கான மையங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

5 மாநிலங்களில் மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 724 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 5 மாநிலங்களிலும் சேர்த்து 679 தொகுதிகளில் மொத்தம் 8,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ராஜஸ்தானில் மட்டும் வேட்பாளர் ஒருவர் இறந்ததால் ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக வெற்றி பெற்றால் அந்த மாநிலத்தில் தொடர்ந்து 4-ஆவது முறையாக ஆட்சியைப் பிடித்து அக்கட்சி சாதனை படைக்கும். ராஜஸ்தானில் கடந்த சில தேர்தல்களில் பாஜகவும், காங்கிரஸும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றன. இந்த மூன்று மாநிலங்களும் பாஜகவுக்கு மிகவும் முக்கியமானவையாகும்.

ஏனெனில், கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் இந்த மூன்று மாநிலங்களில் உள்ள 65 தொகுதிகளில் 62 இடங்களை பாஜக கைப்பற்றியிருந்தது. வடகிழக்கில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள ஒரே மாநிலம் மிஸோரம் மட்டும்தான். எனவே, அங்கு ஆட்சியைத் தக்கவைக்க வேண்டியது காங்கிரஸுக்கு முக்கியமாகும்.

தெலங்கானாவில், ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி அதிக தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக வாக்குக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ்-தெலுங்கு தேசம்- இந்திய கம்யூனிஸ்ட்-தெலங்கானா ஜன சமிதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. பாஜக மூன்றாவது போட்டியாளராக களமிறங்கியது. தேவை ஏற்பட்டால் தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கு ஆதரவு அளிப்போம் என்று அந்த மாநில பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்டது. எனவே, அங்கு பாஜக வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதை அவர்களே உறுதிப்படுத்திவிட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com