லண்டன்: என்னிடம் பணத்தை வாங்க கூடாதென்று வங்கிகளுக்கு மறைமுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது என்று தொழில் அதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
பாரத ஸ்டேட் வாங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் இருந்து ரூ. 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று விட்டு, திரும்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடியவர் விஜய் மல்லையா. , அவரை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது.
இதுதொடர்பான சிபிஐ உள்ளிட்ட விசாரணை முகமைகள் சார்பாக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. இந்நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது. இது அவருக்கு பெருத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் என்னிடம் பணத்தை வாங்க கூடாதென்று வங்கிகளுக்கு மறைமுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது என்று தொழில் அதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தியாவுக்கு அனுப்பப்படுவதற்காக லண்டன் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன்.
நான் 2016-ஆம் ஆண்டிலேயே பணத்தை வங்கிகளுக்கு திருப்பி வழங்குவதாக அறிவித்திருந்தேன். ஆனால் பணத்தை வாங்க கூடாதென்று வங்கிகளுக்கு அப்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே என்னிடம் இருந்து பணத்தை வாங்குவதற்கு பதிலாக என்னை இந்தியாவுக்கு கொண்டு வருவதில்தான் மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.