ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக பூபேஷ் பாகேல் திங்களன்று பதவியேற்றுக் கொண்டார்.
சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 68 தொகுதிகளில் வென்றது. கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த பாஜகவால் 15 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
ஆனால் சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் பதவிக்கு யாரையும் முன்னிறுத்தி காங்கிரஸ் போட்டியிடவில்லை. இதனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும், முதல்வர் குறித்து அக்கட்சியால் உடனடியாக முடிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
அக்கட்சியின் எம்எல்ஏக்கள் பூபேஷ் பாகேல், டி.எஸ். சிங் தேவ், தம்ராத்வாஜ் சாகு, சரண் தாஸ் மகந்த் ஆகிய 4 பேர் இடையே முதல்வர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவி வந்தது.
தில்லியில் இவர்கள் 4 பேருடனும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். அதேநேரத்தில் சத்தீஸ்கரில் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் ஞாயிற்றுக் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சத்தீஸ்கர் எம்எல்ஏக்களில் ஒருதரப்பினர் டி.எஸ். சிங் தேவுக்கும், மற்றோர் தரப்பினர் பாகேலுக்கும் ஆதரவு தெரிவித்தனர். டி.எஸ். சிங் தேவுக்கு 40 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக பூபேஷ் பாகேல் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக பூபேஷ் பாகேல் திங்களன்று பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் டி.எஸ். சிங் தேவ் மற்றும் தம்ராத்வாஜ் சாகு இருவரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.