பிரிவினைவாதிகள் அடைப்பு அறிவிப்பு: காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடங்கியது

ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாதிகளின் முழு அடைப்பு போராட்டம் காரணமாக, மாநிலத்தில் இயல்புநிலை ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாதிகளின் முழு அடைப்பு போராட்டம் காரணமாக, மாநிலத்தில் இயல்புநிலை ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்டது.
புல்வாமா மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்; ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். மேலும், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமக்கள் 7 பேரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து, அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, பிரிவினைவாத இயக்கங்களின் கூட்டமைப்பு 3 நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. 
இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புல்வாமா மாவட்டத்திலும், ஸ்ரீநகரில் நெளஹட்டா, கன்யார், ரைனவாரி, சஃபக்கடல், எம்.ஆர்.குஞ்ச், மைசுமா ஆகிய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளிலும்  ஞாயிற்றுக்கிழமை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்கவும், சட்டம்-ஒழுங்கு நிலையைப் பராமரிக்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது 
என்று பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
இதனிடையே, பிரிவினைவாதிகளின் போராட்டம் காரணமாக, கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை மூடப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சில இடங்களில் தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டன. நகரின் பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படும் வாரச்சந்தையும் மூடப்பட்டிருந்தது. இதனிடையே, பிரிவினைவாதிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்று பொதுமக்களை ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com