சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் சிறை அறிவிக்கப்பட்ட சஜ்ஜன்குமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
கடந்த 1984, அக்டோபர் 31-இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவரது மெய்ப் பாதுகாவலரால் (சீக்கியர்) சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, தலைநகர் தில்லியிலும் அதன் அண்டை மாநிலங்களிலும் சீக்கியர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது. இதில், தில்லியில் மட்டும் 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சீக்கியப் பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டனர்.
இந்தக் கலவரத்துக்கு நீதி கேட்டு சீக்கிய அமைப்புகள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றன. இந்நிலையில், இந்தக் கலவரம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
இந்நிலையில் சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் சிறை அறிவிக்கப்பட்ட சஜ்ஜன்குமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராகுல் காந்திக்கு சஜ்ஜன்குமார் சிங் ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார்.