சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 3 முறை மக்களவை உறுப்பினராக செயல்பட்டவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சஜ்ஜன் குமார், அக்கட்சியில் இருந்து விலகினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு ராஜிநாமா கடிதத்தை அனுப்பினார். அதை ராகுலும் ஏற்றதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சீக்கிய கலவரம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூற ராகுல் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், சஜ்ஜன் குமார் தனது பாதுகாவலர்களுடன் தில்லியில் உள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் செவ்வாய்கிழமை காலை சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்கள் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் கூற மறுத்துவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அனுக உள்ளதாக சஜ்ஜன் குமாரின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.