ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணைக்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
மத்திய நிதியமைச்சராக முன்பு ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியாவில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ரூ.305 கோடி முதலீடு செய்ய அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய ஒப்புதலை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியன வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஏற்கெனவே இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி இன்று தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜரானார்.