அதி நவீன ஜிசாட் 7ஏ செயற்கைக் கோள் வெற்றிகரமாக புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று மாலை 4.10 மணியளவில் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதையடுத்து, இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ஜிசாட்-7ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோளைத் தாங்கியபடி ஜி.எஸ்.எல்.வி.-எப்11 ராக்கெட் இன்று மாலை விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், திட்டமிட்டபடி சரியான பாதையில் சென்று, செயற்கைக் கோளை புவிவட்டப் பாதையில் திட்டமிட்ட இடத்தில் நிலை நிறுத்தியுள்ளது.
35 நாட்களில் 3வது முறையாக ராக்கெட்டை விண்ணில் ஏவி, செயற்கைக் கோளை வெற்றிகரமாக, திட்டமிட்டபடி புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தியுள்ளது இஸ்ரோ என்றும் சிவன் தெரிவித்தார்.