ஜெய்ப்பூர்: வரவிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு ராஜஸ்தானில் ஒரு சில ஓட்டல்களில் ஓர் இரவு தங்குவதற்கு 11 லட்ச ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
வரவிருக்கும் புத்தாண்டை கொண்டாடுவதற்கு என இந்தியாவெங்கும் நட்சத்திர ஓட்டல்கள் விரிவான திட்டத்துடன் தயராகி வருகின்றன. அந்த வகையில் புகழ்பெற்ற பல்வேறு நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பழைய அரண்மனைகள் நிரம்பிய நகரங்களைக் கொண்ட ராஜஸ்தானும் தயாராகி வருகிறது.
அதன்படி ராஜஸ்தானில் ஒரு சில ஓட்டல்களில் ஓர் இரவு தங்குவதற்கு 11 லட்ச ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக ஜோத்பூரில் உள்ள உமைத் பவன், உதய்பூரில் உள்ள தாஜ் லேக் பேலஸ் போன்ற விடுதிகளில் 11 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ராம்பாக் அரண்மனை உள்ளிட்ட விடுதிகளில் விடுதி வரிகள் நீங்கலாக ஒரு நாள் இரவு தங்க மட்டும் 8 1/2 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இவ்வளவு அதிகபட்சமான கட்டணமிருந்தாலும், கொண்டாட்டங்களில் அந்தரங்கத் தன்மையை விரும்பும் பிரபலங்களும்,பணக்காரர்களும் பணத்தை ஒரு பொருட்டாக கருதாமல் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த வருட புத்தாண்டு கொண்டாட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த கட்டணம் இம்முறை 7 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.