போபால்: மத்திய பிரதேசத்தில் பழுப்பட்ட மின்மாற்றியை மாற்றித் தருமாறு காலில் விழுந்து கதறிய விவசாயியை, மாவட்ட ஆட்சியர் கண்டு கொள்ளாமல் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் உள்ள மின்மாற்றி பழுதாகி விட்டது. இதனால் அங்குள்ள வயல்களுக்கு தண்ணீர் இறைக்க முடியாமல் பயிர்கள் நீரின்றி காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுப்பதற்கு வந்திருந்தார். அப்போது அவர் சென்ற நேரத்தில் அலுவலகத்தை விட்டு செல்வதற்காக பெண் ஆட்சியர் வெளியே வந்தார்.
ஆட்சியரைப் பார்த்த விவசாயி உடனடியாக பழுதடைந்த மின்மாற்றியை விரைந்து மாற்றிப் பொருத்த வேண்டும் என்று அவரது காலில் விழுந்து முறையிட்டார்.
ஆனால் அதனைச் சற்றும் பொருட்படுத்தாத ஆட்சியர் விறுவிறுவென காரில் ஏறி அமர்ந்து கொண்டு, காரின் கண்ணாடியை சற்று இறக்கி காரில் இருந்தவாறே பதில் கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
விவசாயியை மதிக்காத ஆட்சியரின் இந்த போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியரின் காலடியில் விவசாயி அழுது புலம்பும் காட்சி இணையதளத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
விடியோ: