பயங்கரவாதி மீட்பு 4 மாதங்களுக்கு முன்பு சிறையில் திட்டமிடப்பட்டது: குற்றவாளிகள் வாக்குமூலம்

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி நவீத் ஜட்டை மீட்கும் திட்டத்துக்கு உதவிய 4 பேரை காஷ்மீர் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
பயங்கரவாதி மீட்பு 4 மாதங்களுக்கு முன்பு சிறையில் திட்டமிடப்பட்டது: குற்றவாளிகள் வாக்குமூலம்


ஸ்ரீநகர்: பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி நவீத் ஜட்டை மீட்கும் திட்டத்துக்கு உதவிய 4 பேரை காஷ்மீர் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஸ்ரீநகர் மருத்துவமனையில், பயங்கரவாதி நவீத் ஜட்டை மீட்பது குறித்து 4 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீநகர் மத்திய சிறையில் திட்டமிட்டதை குற்றவாளிகள் வாக்குமூலத்தில் அளித்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை ஏடிஜிபி முனிர் கான் கூறுகையில், சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இது குறித்து விசாரித்து வருகிறார்கள். சம்பவத்தின் போது 3 பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய 2 பேர் உட்பட 5 பேர் தப்பியுள்ளனர்.

அறிவியல் தடயங்களின்படி, அந்த குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளோம். தப்பிய 5 பேரில், இரண்டு பயங்கரவாதிகளும், இரண்டு உதவியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், பயங்கரவாதி டிகா கான், ஸ்ரீநகர் மத்திய சிறைக்கு பார்வையாளராக அடிக்கடி வந்து சென்றுள்ளார். நவீத்துடனும் தொடர்பில் இருந்துள்ளார். பல்வேறு காரணங்களைச் சொல்லி ஒவ்வொரு முறையும் டிகா கான் சிறைக்கு வந்து சென்றுள்ளார். அதே போல, பல்வேறு தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் நவீத்தும் அவரது கும்பலும் தொடர்பு கொண்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறியுள்ளார்.

சம்பவத்தின் பின்னணி: 
லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி முகமது நவீத் ஜட் என்ற அபு ஹன்சுல்லா (22) உள்பட 6 சிறைக் கைதிகளை மருத்துவப் பரிசோதனைக்காக ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் (எஸ்.எம்.எச்.எஸ்.) மருத்துவமனைக்கு போலீஸார் கடந்த செவ்வாய்க்கிழமை அழைத்து வந்தனர். மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து கைதிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தபோது, திடீரென அப்பகுதியில் மறைந்திருந்த இரு லஷ்கர் பயங்கரவாதிகள் போலீஸாரை துப்பாக்கியால் சுட்டு விட்டு, நவீத் ஜட்டுடன் தப்பிச் சென்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் இரு போலீஸார் உயிரிழந்தனர்.

பகல் நேரத்தில் பாதுகாப்பு அதிகமுள்ள முக்கிய மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவம் தேசிய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் மீதும், சிறைத் துறையினர் மீதும் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.

மருத்துவமனைக்கு நவீத் அழைத்து வரப்படுவது குறித்து ஏற்கெனவே தெரிந்து கொண்டு பயங்கரவாதிகள் அங்கு முன்னதாக வந்து பதுங்கியிருந்துள்ளனர். நவீத் கொண்டு வரப்படும் தகவல் எப்படி கசிந்தது என்றும், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் நவீத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது ஏன்? என்றும் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இதையடுத்து, மாநில சிறைத் துறை டிஜிபி எஸ்.கே. மிஸ்ரா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு காவலர் வீட்டு வசதித் துறைத் தலைவராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com