மும்பை: தமிழில் 'காதலர் தினம்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த சோனாலி பிந்த்ரே புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி அமெரிக்காவில் சிசிச்சை பெற்று வரும் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் சோனாலி பிந்த்ரே. இவர் தமிழில் முதன்முறையாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பம்பாய்' திரைப்படத்தில் 'அந்த அரபிக் கடலோரம்' பாடலுக்கு நடனமாடினார். பின்னர் கதிர் இயக்கத்தில் வெளியான 'காதலர் தினம படத்தில் கதாநாயகியாக நடித்தார். மற்றும் சில தமிழ் படங்களிலும் அநேக தெலுங்கு படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் சோனாலி பிந்த்ரே புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி அமெரிக்காவில் சிசிச்சை பெற்று வரும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக புதன்கிழமையன்று தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் அவர் இத்தகவலை வெளியிட்டு நீண்ட பதிவினை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
சிலசமயங்களில் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்காத தருணத்தில் இத்தகைய அதிர்ச்சிகள் உங்களுக்கு கிடைக்கும். சமீபத்தில் எனக்கு உயர் நிலை பாதிப்புடன் புற்றுநோய் இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டது. ஆனால் அப்படி ஒன்றுஇருப்பதற்கான அறிகுறியே முதலில் தெரியவில்லை.
இந்த சமயத்தில் எனது குடும்பமும் நெருக்கமான நண்பர்களும் எனக்கு ஆதரவாக அருகிலிருக்கின்றனர். அவர்கள் எனக்குத் தேவையான எல்லா ஆதரவினையும் வழங்கி வருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் இருப்பதால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கின்றேன். இவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
மருத்துவர்கள் ஆலோசனையின் படி நான் தற்பொழுது நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வருகின்றேன். மிகுந்த நமபிக்கையுடன் இருக்கும் நான் இந்த போரின் ஒவ்வொரு கட்டத்தினையும் சந்திக்க உறுதியுடன் உள்ளேன்.
எனது குடும்பம் மற்றும் நண்பர்கள் உதவியுடன் இந்த போர்க்களத்தை நேருக்கு நேராக எதிர்கொள்ள நான் தயராகி உள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் கோல்டி பெஹல்-ஐ திருமணம் செய்துள்ள சோனாலி பிந்த்ரேவுக்கு ரன்வீர் என்ற மகன் உள்ளார்.