விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வலியுறுத்தினார்.
பஞ்சாபில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் புதன்கிழமை நடத்தப்பட்ட விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அதற்கு முன்னதாக, சுட்டுரையில் அமரீந்தர் சிங் வெளியிட்ட பதிவில், மோடி அவர்களே, விவசாயிகளின் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்துவது ஆகியவை தொடர்பாக அறிவிப்பு வெளியிட இதுவே சரியான தருணம். உங்களிடம் இருந்து பஞ்சாப் விவசாயிகள் சாதகமான செய்தியை எதிர்நோக்கியுள்ளார்கள். அவர்களை ஏமாற்றி விடாதீர்கள்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னதாக, பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க விவகாரத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் அரசியல் செய்யக் கூடாது என்று சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் வலியுறுத்தினார்.
அதே சமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் விவசாயிகள் மாநாடு நடத்தப்பட்டதை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்தது.
விவசாயிகள் தற்கொலை செய்வது, போதைப்பொருள்களுக்கு அடிமையாவது என்று இருக்கும் நிலையில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போல கொண்டாட்ட நிகழ்ச்சி தேவையா? என்று ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியது.
மேலும், மாநாட்டுக்கு செலவான பணத்தைக் கொண்டு, பஞ்சாபில் கடந்த 10 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்திருக்கலாம் என்றும் அக்கட்சி தெரிவித்தது.