நேர்மையற்ற தில்லி தலைமைச் செயலரை பாஜக பாதுகாத்து வருகிறது என ஆம் ஆத்மி புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
"அருணா ஆசஃப் அலி மருத்துவமனையின் மருத்துவராக பணிபுரியும் அவினாஷ் குமார் தில்லி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷுக்கு எதிராகவும், முன்னாள் தலைமைச் செயலாளர்கள் எதிராகவும் புகார் தெரிவித்துள்ளார். அதில், ஊழல்வாதிகளை காப்பாற்ற ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் லஞ்சம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றிடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.
இதுபோன்ற நோ்மையற்ற தில்லி தலைமைச் செயலருக்கு பாஜக அடைக்கலம் அளித்து வருகிறது. ஊழலுக்கு துணைபோகும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ஊழல் புகார் தெரிவிப்போருக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஊழலால் பாஜக பயனடைவது தெளிவாகிறது.
தில்லி தலைமைச் செயலர் லஞ்சம் பெறவில்லையென்றால், நேர்மையற்ற அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன்? எனவே, இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரும் புகார் கோரிக்கையை ஆம் ஆத்மி ஆதரிக்கிறது என்றார்" சஞ்சய் சிங்.