கொச்சி: ரூ.11 கோடி மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தை கடத்திச் செல்ல முயன்ற ஆப்கானைச் சேர்ந்த நபர் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தில்லியில் இருந்து துபை செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு கொச்சியில் தரையிறக்கப்பட்டது. இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டு எமிரேட்ஸ் விமானம் புறப்படத் தயாரான போது, அதில் ஏறுவதற்காக வந்த 33 வயது ஆப்கான் நபர் முஹம்மது சித்திக் வைத்திருந்த பையில் இருந்த ரூ.11 கோடி மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் பெரும்பாலானவை அமெரிக்க டாலர்களும், சௌதி ரியால்களுமாக இருந்தது.
அவர் வைத்திருந்த நீரை சூடுபடுத்தும் இயந்திரம், குக்கர் போன்றவற்றுக்குள் மறைத்து வைத்திருந்த பணத்தை விமான நிலைய ஸ்கேனர் கருவி கண்டுபிடித்தது.
முதல் கட்ட விசாரணையில், கடந்த 2 மாதங்களில் அவர் தில்லியில் இருந்து 17 முறை காபூல் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
கொச்சியில் சிக்கிய நபர், தில்லி விமான நிலையத்தில் எப்படி சிக்காமல் தப்பித்தார் என்பதே தற்போதைய உலகமய கேள்வியாக உள்ளது.